RSS

Saturday, 9 October 2010

உண்மையை ஒருபோதும் எரிக்க முடியாது

அரசியல் குழு: குர்ஆன் நிரந்தரமானது. ஏனெனில் இறைவனும் உண்மையும் எப்போதும் நிரந்தரமானவை என ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், வியாழக்கிழமை, நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதலின் நினைவாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட குர்ஆன் எரிப்பு அசம்பாவிதத்தை விமர்சித்த அவர், 'குர்ஆன் என்பது பரிசுத்த வேதம். அது இஸ்லாத்தின் தூதரது நிரந்தரமான அற்புதங்களில் ஒன்று. அவர்கள், குர்ஆனின் போதனைகளையும் உண்மையையும் எரிப்பதற்காக குர்ஆன் பிரதிகளை எரித்துள்ளனர். எவ்வாறாயினும், குர்ஆன் என்பது எல்லையற்றதும் நிரந்தரமானதுமாகும். ஏனெனில் இறைவனும் உண்மையும் நிரந்தரமானவை என அவர் மேலும் தெரிவித்தார்.

குர்ஆன் எரிக்கப்பட்ட கீழ்த்தரமான மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு உலகம் சாட்சியாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், 'புனித அல்குர்ஆன், இறைவனை வணங்குதல், நீதி, மனிதர்களை கண்ணியப்படுத்தல், சமாதானத்தை ஏற்படுத்தல், சீரிய சிந்தனை, ஆக்கிரமிப்புக்குள்ளானோரைப் பாதுகாத்தல், அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடுதல் என்பவற்றையே போதிக்கின்றது. முன்னைய இறைத்தூதர்களான நூஹ், இப்ராஹீம், இஸ்ஹாக், யூசுப், மூசா, மற்றும் ஈசா எனும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் பெயர்களும் அவர்களது வரலாறுகளும் இதில் கூறப்படுகின்றன. இந்த உண்மைகளையும் இதிலுள்ள நியாயங்களையும் எரிப்பதற்காகவே அவர்கள் குர்ஆனை எரித்துள்ளனர். எவ்வாறாயினும் உண்மையை ஒருபோதும் எரித்து விட முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடுகளிடையே இடைவெளியையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் இத்தகைய செயல்கள் தீய சாத்தானின் செயல்களாகும் என ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் வலியுறுத்தினார்.
நாம் சாத்தானின் கைப்பொம்மைகளாக செயற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். ஈரான் தேசத்தின் சார்பாக, நான் உலகிலுள்ள அனைத்து சமயங்களுக்கும் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கும் அவற்றின் வேதநூல்களுக்கும் உயர்ந்த கௌரவத்தையும் மதிப்பையும் வழங்குகின்றேன். இது குர்ஆன், இது பைபிள். நான் இவ்விரண்டுக்கும் மிக உயர்ந்த கண்ணியத்தைக் கொடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Powered by Blogger.